போலீஸ் சித்திரவதை: சட்ட மாணவரின் சகோதரர் புகார்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மாணவர் வன்முறை தொடர்பாக போலீஸாரால் தேடப்பட்டு வரும் மாணவரின் பெற்றோரை போலீஸார் சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக கூறி அவரது சகோதரர் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த மாணவனின் சகோதரர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 11ந் தேதி குடவாசல் போலீசார் எனது தந்தை ஜகன்நாதனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். 16ந் தேதி எனது தங்கை அகிலா, உறவினர் அழகர்சாமி ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அவர்களை விடுவிக்காமல் சட்டவிரோதமாக காவலில் வைத்து கொடுமைப்படுத்துகின்றனர். எனது சகோதரன் ராஜா ஒப்படைத்து விட்டு, பெற்றோரை கூட்டி செல்லலாம் என போலீசார் மிரட்டுகின்றனர். எனவே அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர் கோர்ட்டில் சரண்-2 பேர் கைது:
இந்த நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரவிநாராயணன் என்ற மாணவர், சென்னை சைதாப்பேட்டை 2வது கோர்ட்டில் சரணடைந்தார்.
போலீஸார் தன்னைத் தேடுவதாக அறிந்ததாகவும், இதனால் சரணடைவதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும், பொள்ளாச்சியை சேர்ந்த அசோக், சிவகிரியை சேர்ந்த முருகேசன் ஆகிய 2 மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
இன்று மதியம் வரை இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் போலீஸ் வசம் சிக்கியுள்ளனர்.
7 பேருக்கு சப் ஜெயில்-மற்றவர்களுக்கு புழல்:
இதற்கிடையே, 23 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை, கிரிமினல் குற்றவாளிகளுடன் சேர்த்து அடைக்கக் கூடாது என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 7 மாணவர்கள் சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாணவர்கள் அடைக்கப் பட்டிருக்கும் சிறைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாணவர்களை சந்திக்க யார்-யார் சந்திக்க வருகிறார்கள் என்ற பட்டியலும் எடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications