வெளியேறுகிறார் யாஹூ தலைமை நிர்வாகி!
கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான வர்த்தக பேரத்தை வலிந்து முறித்துக் கொண்டதால் கோபமடைந்த யாஹூ இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கோபமே அவரைப் பதவி விலக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சர்வதேச வர்த்தக நிபுணர்கள்.
யாங் வெளியேறினாலும் சீனாவின் அலிபாபா நிறுவனத்துடனான 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திலிருந்து யாஹூ பின்வாங்காது என்றே கருதப்படுகிறது.
தைவானைச் சேர்ந்த ஜெர்ரி யாங், யாஹூவை நிறுவியவர்களில் ஒருவர். அலிபாபா நிறுவனத்துக்கு மிக நெருக்கமானவராகத் திகழ்ந்தவர். அலிபாபா நிறுவனத்தின் பெரும்பாலான வர்த்தக நிகழ்வுகளில் இவரும் உடன் இருந்துள்ளார். சீனாவின் தீவிர ஆதரவாளர்.
இவரது விலகலால் அலிபாபாவில் யாஹூவுக்கிருந்த 40 சதவிகித பங்குகள் விற்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் நிலவியது.
ஆனால் சீனாவில் இன்று முன்னணியில் உள்ளது அலிபாபா நிறுவனம். இதில் உள்ள தனது 40 சதவிகித பங்குகளை விற்க யாஹூ முனைந்தால் அது அவர்களுக்குத்தான் பெரும் நஷ்டம் என்பதால், புதிதாக வரும் தலைமை நிர்வாகி அலிபாபாவுடன் உறவைத் தொடர்வார் என்றே எதிர்பார்க்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.