பாக். பீரங்கிச் சத்தம் இல்லாமல் நடந்த முதல் காஷ்மீர் தேர்தல்!
குரேஸ் (ஜம்மு - காஷ்மீர்): ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள குரேஸ் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட தாவார் பகுதியில், பாகிஸ்தானிய படைகளின் பீரங்கித் தாக்குதல் இல்லாமல் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் 55 சதவீதம் அளவுக்கு வாக்குப் பதிவு நடந்துள்ளது.
இந்தப் பகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் பாகிஸ்தானிய படைகள் பீரங்கித் தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தானிய படைகள், நேற்று இப்பகுதியில் நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவின்போது அமைதி காத்து தேர்தல் நல்லமுறையில் நடக்க ஒத்துழைத்தன.
தாவார் அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று நடந்த வாக்குப்பதிவின்போது ஏராளமான வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இப்பகுதியில் கடந்த 2003ம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் உடன்பாடானது. இதையடுத்து தற்போது இங்கு பெரும் அமைதி நிலவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
சண்டை நிறுத்தத்திற்கு முன்பு வரை இப்பகுதியில் எப்போது பார்த்தாலும் பாகிஸ்தானிய படைகளின் தாக்குதல் இருந்து கொண்டே இருக்கும். பதிலுக்கு நமது துருப்புகள் சுடுவதால், எந்நேரமும் குண்டுச் சத்தம் கேட்டபடியே இருக்குமாம்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு வெகு அருகில் இருப்பதால் பாகிஸ்தானிய படைகளின் நேரடி இலக்காக இந்த கிராமம் இருக்கிறது. இதனால்தான் பீரங்கிச் சத்தமும், துப்பாக்கிச் சூடும் எந்த நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.
2003ம் ஆண்டுக்குப் பின்னர் இது மாறி விட்டது. இதையடுத்து இங்கிருந்து வேறு கிராமங்களுக்கு இடம் மாறிப் போனவர்களும் கூட மீண்டும் தாவாருக்குத் திரும்பி விட்டனராம்.
இந்தத் தேர்தலில் வாக்களித்தவர்களில் ஒருவர் 90 வயதாகும் முகம்மது தாவார் மிர். தனது மனைவியுடன் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து வந்து வாக்களித்தார். 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, நடந்துள்ள அனைத்துத் தேர்தல்களிலும் இவர் வாக்களித்துள்ளாராம். ஒரு தேர்தலைக் கூட இவர் தவற விடுவதில்லையாம்.