சிரஞ்சீவி கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி!
அனந்தப்பூர்: சிரஞ்சீவியின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திராவில் பிரஜா ராஜ்யம் எனும் பெயரில் புதிய கட்சி ஆரம்பித்துள்ள சிரஞ்சீவி, அக்கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
கடந்த 2 நாட்களாக அனந்தப்பூர் மாவட்டத்தில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். திறந்த வேனில் நின்றபடி தொண்டர்களிடையே பேசி வரும் அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பல இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது.
நேற்று மாலை தர்மாவரம் என்.டி.ஆர். சர்க்கிளில் வேனில் நின்றபடி சிரஞ்சீவி பேசினார். அவருடைய பேச்சைக் கேட்க ஏராளமான கூட்டம் கூடியது. அவர் பேசி முடித்து விட்டு சென்றதும் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், தர்மாவரத்தை சேர்ந்த ஆதி நாராயணா (30), தாஜுதீன் (35) ஆகியோர் தடுமாறி விழுந்தனர். அவர்களை மிதித்து கொண்டு மக்கள் ஓடியதால் 2 பேரும் மூச்சுத் திணறி மயங்கினர்.
பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
இச்சம்பவம் கேள்விப்பட்டதும், மருத்துவமனைக்குச் சென்று இறந்தவர்களின் சடலங்களுக்கு சிரஞ்சீவி அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications