உசிலம்பட்டி வன்முறை-15 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்
மதுரை: உசிலம்பட்டியில் சாலை மறியல் மற்றும் பஸ்கள், கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட 15 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சட்டக் கல்லூரியில் இரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து நடந்த வன்முறைகளில் சென்னை, மதுரையில் பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. உசிலம்பட்டி பகுதியில் பஸ்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே உசிலம்பட்டியை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகளை அடைக்க சொல்லி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். மேலும் பஸ்கள், கடைகள் மீது கல் வீசிய இந்த இரு பள்ளிகளையும் சேர்ந்த 15 மாணவர்களை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரண நடத்தினர்.
அவர்களது எதிர்காலம் பாழாகாமல் தவிர்க்க, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.
இந் நிலையில் வன்முறையில் ஈடுபட்ட இந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பாக்கியபிரபு, செல்லபாண்டி, தனியார் மேல்நிலைப் பள்ளியியைச் சேர்ந்த மாணவர்கள் வெங்கடேசன், முத்துப்பாண்டி, விக்னேஷ், கிருஷ்ணன், ரஞ்சித், மொக்கவீரன், ஜெயப்பிரகாஷ், வினோத்குமார், அகிலன், மாரிமுத்து, கலைவாணன், இந்தியன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.