28 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை
புதுக்கோட்டை: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்னத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இதனால் தமிழக மீனவர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை கடல் பக்கமே வர விடக் கூடாது என்ற உறுதியுடன் இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சுடுவது, தாக்குவது, சித்திரவதை செய்வது என தொடர்ந்து அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறது இலங்கை கடற்படை.
சமீப காலமாக கச்சத்தீவு அருகே பிடிபடும் தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்வது, படகுகளை தாக்கி சேதப்படுத்துவது, மீன்பிடி வலைகளை கிழித்தெறிவது என செயல்பட்டு வருகிறது இலங்கை கடற்படை.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் விரைந்து வந்தனர்.
தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் 2 படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பி வந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் ஜெகதாப்பட்டனம் மீனவர்களிடையே பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications