சட்டக்கல்லூரி வன்முறை: இதுவரை 17 மாணவர்கள் கைது
சென்னை: அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை வெறியாட்டத்துக்குக் காரணமான மாணவர்கள் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சில தினங்களுக்கு முன் மாணவர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருதரப்பு மாணவர்கள் கொடுத்த புகாரின்படி, பால மணிகண்டன், ஜெயக்குமார், திலீபன்ஜோ, பிரபாகரன், கோகுல்ராஜ், வி.கோவிந்தன், பி.கோவிந்தன், சித்திரைச்செல்வன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து சிவகதிரவன், ராஜா, பிரேம்நாத், இளமுகில், கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், இளையராஜா ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும்15 பேரை போலீசார் தேடி வந்தனர். அதில் பொள்ளாச்சியை சேர்ந்த அசோக் என்ற மாணவர் சென்னையிலும், நெல்லை மாவட்டம் சிவகிரியில் முருகேசன் என்ற மாணவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி ஏமாபேர் கிராமத்தை சேர்ந்த ரவிவர்மன் (22) என்ற மாணவர், எழும்பூர் 2-வது மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் முன்பு நேற்று சரணடைந்தார். இவர், 5-ம் ஆண்டு மாணவர். இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். திருக்கோவிலூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற மாணவர் மதுராந்தகம் நீதிமன்றத்தில் நேற்று மாலை சரண் அடைந்தார்.