தமிழக-கேரள எல்லையில் 19ம் தேதி மறியல்
தென்மலை: தமிழக கேரள எல்லையில் சாலைப் பணியை தொடரக் கோரி பொதுமக்கள் நாளை மறுநாள் கண்டன பேரணி, மறியல், கடையடைப்பு நடத்துகின்றனர்.
கொல்லம்-திருமங்கலம் 108 தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள தமிழக எல்லையான கோட்டைவாசல் முதல் தென்மலை வரை சுமார் 26 கிமீ தூரமுள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக முழுமையான பரமாரிப்பு இன்றி சிறு..சிறு பராமரிப்பு பணிகள் மட்டுமே நடந்தப்பட்டன.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வழிச்சாலையாக இச்சாலை உள்ளதால் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் மழையினால் முழுமையாக சேதமடைந்துள்ளன.
இச்சாலைகளை புதுப்பிக்கவும், தென்மலை முதல் புனலூர் வரை பராமரிப்பு மேற்கொள்ளவும் சுமார் 26 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நேற்று பணி துவக்கப்படும் என கேரள அரசு அறிவித்த நிலையில் சபரிமலை சீசன் தொடங்கிவிட்டதால் புதிய பாதை அமைக்கும் பணியை ஜனவரி மாதத்திற்கு கேரள அரசு ஒத்திவைத்துள்ளது.
இதனை கண்டித்து சாலை பணிகளை தாமதமின்றி முழுமையாக செப்பணியிட வலியுறுத்தி ஆரியங்காவு கிராமத்தில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு மற்றும் அரசை கண்டித்து பொதுமக்கள் சார்பில் கண்டன பேரணி, சாலை மறியல் உள்ளி்ட்ட போராட்டங்களை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து இப்பாதையில் வரும் 19ம் தேதி மட்டும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இதர வாகனங்கள் வரவேண்டாம் என்றும் அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லை பகுதியில் நடைபெறும் போராட்டங்களால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று தமிழக வியாபாரிகள், பொதுமக்கள் கூறினர்.