கன்னியாஸ்திரி கொலை: 2 பாதிரியார்கள்-கன்னியாஸ்திரி கைது

கோட்டயத்தில் வைத்து இந்த வழக்கில் தொடர்புடைய பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் பூத்திரிக்கையில் மற்றும் கன்னியாஸ்திரி செஃபி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, கொச்சியி்ல் உள்ள சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இரு பாதிரியார்களும் நேற்று கைது செய்யப்பட்டனர். செஃபி இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு இந்த 3 பேருக்கும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அபயா கொலை வழக்கில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
கோட்டயத்தில் உள்ள பியஸ் 10வது கான்வென்ட்டில் தங்கியிருந்தார் 21 வயதான அபயா. கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, அங்குள்ள கிணற்றில் அபயா பிணமாக மிதந்தார்.
இதை முதலில் தற்கொலையாக கருதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ மற்றும் தடயவியல் விசாரணையில் அபயா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், அதே கான்வென்ட்டுடன் தொடர்புடைய சஞ்சு மாத்யூ என்பவர் கொடுத்த வாக்குமூலம் முக்கிய திருப்பமாக அமைந்தது. இதன் அடிப்படையிலேயே 2 பாதிரியார்களும், கன்னியாஸ்திரி செஃபியும் கைதாகியுள்ளனர்.
கடந்த 16 வருடங்களாக நடந்து வந்த விசாரணையில் நடந்துள்ள முதல் கைது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வழக்கை அமுக்கப் பார்க்க முயல்வதாகவும், அரசியல் செல்வாக்கு குறுக்கிடுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கண்காணித்து வந்தது என்பது நினைவிருக்கலாம்.
அபயா வழக்கை முறையாக நடத்துவதை வலியுறுத்தி அபயா கூட்டு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் விசாரணையை நடத்தக் கூடாது என கடந்த 1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அலுவலகத்திலிருந்து தனக்கு நெருக்குதல்கள் வந்ததாக இந்த வழக்கை ஆரம்பத்தில் விசாரித்த முன்னாள் சிபிஐ டிஎஸ்பி வர்கீஸ் தாமஸ் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications