ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டமில்லை-மார்க்சிஸ்ட்
தூத்துக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவை தாங்களும் உடனடியாக சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.கே.ரங்கராஜன் கூறினார்.
அக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான ரங்கராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டிய கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் சில நடவடிக்கைகள் தேவை இல்லை என்று நினைப்பதால் கூட்டத்துக்கு போகவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பரதன், ஜெயலலிதாவை சந்தித்த பிறகு டெல்லியில் எங்களது கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத்தை சந்தித்து ஜெயலலிதாவுடன் பேசியது குறி்த்து எடுத்துக் கூறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜெயலலிதாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். கூட்டணி குறித்து இரு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் சேர்ந்து தான் முடிவெடுப்பார்கள்.
ஒவ்வொரு தலைவரையும் இன்னொரு தலைவர் சந்திப்பதை எல்லாம் கூட்டணிக்கு அச்சாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் கூட்டணி என்றால் கேரளா, மேற்கு வங்காளம், திரிபுராவில் மட்டும்தான். மற்ற இடங்களில் நட்பு கட்சிகளோடு தொகுதி உடன்பாடு தான் செய்து கொண்டுள்ளோம்.
திமுகவுடனான உறவைப் பொறுத்தவரை அரசு செய்யும் நல்ல திட்டங்களை வரவேற்பதும், மக்களை பாதிக்கும் திட்டங்களை விமர்சிப்பதும், போராட்டங்கள் நடத்துவதுமாக எங்கள் உறவு உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications