கருணாநிதி ராஜினாமா கோரும் எஸ்ஆர்பி!

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரையில் நிலவி வரும் நிலைதான் சென்னையிலும் தற்போது உருவாகி உள்ளது. சென்னை சட்டக் கல்லூரியில் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த திட்டத்தை முன்கூட்டியே அறிந்த காவல் துறை கல்லூரியின் வாசலில் பெரும் படையை நிறுத்தி வைத்திருந்தது.
கல்லூரியை விட்டு வெளியே வந்த குறிப்பிட்ட சில மாணவர்களை அங்கு நின்றிருந்த ஒரு கூட்டம் ஆயுதங்களால் தாக்கியது. இந்த கொடூர தாக்குதலை கண்ணெதிரே கண்டும் அதனை தடுக்க முடியாமல் காவல் துறையினரின் கைகளை யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள்.
இந்த மோதலுக்கு காவல் துறையில் பொறுப்பு வகிப்பவர்கள் என்ற அடிப்படையில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மறுநாள் போலீஸ் கமிஷனர் மாற்றப்பட்டார்.
இவ்வாறு அதிகாரிகள் அளவில் மட்டும் கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே தவிர அரசியல் மட்டத்தில் பொறுப்பு வாய்ந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்பு அரியலூரில் ரயில் கவிழ்ந்தபோது அதற்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி தன் பதவியை ராஜினாமா செய்தார். ரயில்வே இணையமைச்சர் ஓ.வி. அழகேசனும் பதவி விலகினார்.
அத்தகைய சிறந்த மரபுகளையும் முன்னுதாரணங்களையும் பின்பற்றி ஏதேனும் ஒரு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும்.
இதற்கு மாறாக சட்டப்பேரவையில் இந்த சம்பவம் குறித்து பதில் அளித்து பேசிய துரைமுருகன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்து பேசுவதில்தான் முனைப்பு காட்டினார். இதன் மூலம் சட்டமன்ற ஜனநாயகத்தை துரைமுருகன் கேலிக் கூத்தாக்கினார்
அதற்கு மறுநாள் சட்டசபைக்கு வந்த முதல் அமைச்சர் முந்திய நாள் தான் சபைக்கு வராததற்கான காரணத்தை சொல்லவில்லை. பெயரளவுக்கு சில அதிகாரிகளை இடைநீக்கம் செய்தும், இடமாறுதல் செய்தும் பரிகாரம் தேடிக்கொள்ள முதலமைச்சர் முயன்றிருக்கிறார்.
இதற்காக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் பணியில் இருக்கும் நீதிபதியை நியமிக்கவில்லை. ஓய்வு பெற்ற நீதிபதிதான் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நேற்றைய தினம் சென்னையில் காவல் துறை பயிற்சி பள்ளி அருகே முன்னாள் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது நள்ளிரவில் சம்பவம் என்று கூறுகிறார்கள். இரவு நேரத்தில் காவல் துறை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தால் கொலையாளிகளை பிடித்திருக்கலாம்.
இந்த சம்பவத்திலிருந்து காவல் துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை அறிய முடிகிறது. எனவே காவல் துறைக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலை புலிகளுக்கு தற்போது மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறார். ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள்தான் கொலை செய்திருப்பார்கள் என்று 'ராஜீவின் கடைசி மணித் துளிகள்' என்ற தனது நூலில் தா.பாண்டியன் கூறியிருக்கிறார். ஆனால் இப்போது அவர் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்பதன் மூலம் புலிகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் என்றார் எஸ்.ஆர்.பாலசுப்பரமணியம்.












Click it and Unblock the Notifications