சாலையில் ஆசிட்-பஸ்சால் தெறித்து 7 குழந்தைகள் காயம்
சென்னை: லாரியிலிருந்து சாலையில் கசிந்த ஆசிட் மீது பஸ் டயர் ஏறி, அது தெளித்ததில், சாலையோரம் சென்ற ஆட்டோவில் பயணித்த 7 சிறார்களும், ஆட்டோ டிரைவரும் காயமடைந்தனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பத்திரமாக திரும்பி வர வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்காத பெற்றோரே இருக்க முடியாது.
ஆனால் அமைதியாக ஆட்டோவில் போய்க் கொண்டிருந்த பள்ளிக் குழந்தைகள் 7 பேருக்கும், அந்த ஆட்டோவின் டிரைவருக்கும் நேற்று நடந்த விபரீதம் யாரும் எதிர்பாராதது.
சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில், அந்த பள்ளி உள்ளது. அது மாற்றுத் திறன் கொண்டோருக்கான சிறப்புப் பள்ளியாகும்.
இப்பள்ளியில் படித்து வரும் ஹரிஹரன் (8), பிரதீஷ் (9), நிவேத் (11), பிரனவ் கிருஷ்ணா, பிரதீப் குமார், விஜயேந்திரன் (14), அனிதா (11) ஆகியோர் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை டிரைவர் மாரிமூர்த்தி ஓட்டினார்.
அம்போத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ வந்தபோது, சாலையோரம் லாரியில் ஆசிட் கேன்களை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கேன் விழுந்ததில் அதிலிருந்த ஆசிட் சாலையில் கொட்டியது.
அப்போது வேகமாக வந்த அரசுப் பேருந்து, அந்த ஆசிட் மீது ஏறியது. இதில் ஆசிட் பலமாக தெளிக்கப்பட்டதில், அது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தோர் மீது பட்டது.
ஆசிட் மேலே வந்து விழுந்ததால் குழந்தைகள் அலறித் துடித்தனர். முகம், கண்கள், கைகளில் அவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது. டிரைவருக்கும் ஆசிட் பட்டதால் அவரும் எரிச்சல் ஏற்பட்டு அலறினார்.
திடீரென நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அக்கம் பக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் அம்பத்தூர் ரோட்டரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
டிரைவர் மாரிமுத்துவுக்கு 7 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவரது முகம் மற்றும் வலது பக்கத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளில் விஜயேந்திரனுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. மற்றவர்களுக்கு 2 முதல் 5 சதவீத காயம் வரை ஏற்பட்டிருந்தது.
பிரணவ் கிருஷ்ணாவுக்கு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவனது கருவிழி பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் அனைவரும் மருத்துவமனையிலிரு்நது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
குழந்தைகள் மற்றும் டிரைவர் மீது பட்ட ஆசிட், பாத்ரூம்களை சுத்தம் செய்யப்ப பயன்படுவதாகவும். இதை மகா அலட்சியமாக சாலையில் வைத்து லாரியில் ஏற்றிய குற்றத்திற்காக லாரி டிரைவர் துரை சிங், கடை உரிமையாளர் மணி முத்து ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications