ஒகேனக்கல் பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார்: மொய்லி

தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகளை எழுப்பி, திட்டத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது கர்நாடகா.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அண்மையில் தமிழக அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக எல்லைக்குள் ஒகேனக்கல் இருப்பதாகக் கூறி, இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு வற்புறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி நேற்று கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் ஆளும் பா.ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லியிடம் நிருபர்க்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கோ, மத்திய அரசோ நேரடியாக தலையிட முடியாது. இரு மாநில நீர்த் தேவை தொடர்புடைய இந்த பிரச்சினையில் இரு மாநில முதல்வர்களும் நேரடியாகப் பேசி தீர்வு காண வேண்டும்.
ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களால் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விவகாரத்தை இரு மாநில அரசுகளும் அரசியலாக்குவதாக நான் கருதவில்லை.
மின்சாரம் மற்றும் நீர்ப் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே தீர்ப்பாயம் தீர்ப்பளித்து விட்டது. அதில் சில விஷயங்கள் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் பிரச்சினையை இரு மாநில அரசுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே இந்த விஷயத்தில் இரு மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளாதவரை மத்திய அரசு தலையிடாது. இரு தரப்பு விவகாரங்களில் பிரதமரும் தலையிட முடியாது. இரு தரப்பினரும் பேசித்தான் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
தமிழக, கர்நாடக நீர்த்தேவை மற்றும் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்து விட்டது. அது விஷயத்தில் மாநில அரசுகள் தெரிவித்துள்ள ஆட்சேபம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், இரு மாநில அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சினையை அரசியலாக்காமல் தவிர்க்க வேண்டும் என்றார் மொய்லி.












Click it and Unblock the Notifications