காஷ்மீரில் தேடப்படும் கேரள தீவிரவாதி ஆந்திராவில் கைது
ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீர் மாநில பாதுகாப்புப் படையினரின் வேட்டையிலிருந்து தப்பியதாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதி, ஹைதராபாத்தில் சிக்கியுள்ளார்.
அவரது பெயர் ஷேக் அப்துல் ஜாபர் (34). கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், திரூரைச் சேர்ந்தவர். ஹைதராபாத் இஸ்மாயில் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டிலிருந்து ஷேக் அப்துல் ஜாபரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். உளவுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைதாகியுள்ள ஜாபர், 2முறை திருமணமானவர். இவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.
ஜாபர், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிரவாதிகள் வேட்டையின்போது தப்பி வந்தவர் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்ட கண்ணூரைச் சேர்ந்த முகம்மது பைசல் என்பவர் ஏராளமான மலையாளி இளைஞர்களை தீவிரவாதிகளாக்குவதற்காக பயிற்சி முகாம்களுக்கு அழைத்துச் சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதையடுத்து அவர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர்களை கேரள போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் குறித்து நாடு முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில்தான் ஜாபர் என்பவர் ஹைதராபாத்தில் பிடிபட்டுள்ளார்.
அவரிடம் ஹைதராபாத் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications