புதுக்கோட்டை மீனவர்களின் ஸ்டிரைக் வாபஸ்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் மற்றும் கோட்டைப்பட்டணம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. நேற்று காலை முதல் அவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றனர்.
கடந்த 18ம் தேதி நடுக் கடலில் ஜெகதாப்பட்டணம் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அவர்களில் 22 பேரை கடத்திச் சென்று விட்டனர். இதையடுத்து கடந்த 19ம் தேதி முதல் ஜெகதாப்பட்டணம் மற்றும் கோட்டைப்பட்டணம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீனவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெகதாப்பட்டணம் விசைப்படகு மீனவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் கூறுகையில், மீனவர்களை மீட்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு பலன் தெரிய ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியத் தூதர், தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பார் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, முதல்வர் கருணாநிதிக்கு உறுதியளித்துள்ளார். இதையடுத்து எங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம்.
இருப்பினும், இன்னும் 2 நாட்களில் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், நாகை, தஞ்சை, ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications