மாலேகான் குண்டுவெடிப்பு: எனக்கு தொடர்பில்லை-தொகாடியா
அகமதாபாத்: மாலேகான் குண்டுவெடிப்பில் எனக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது தவறானது, விஷமனத்தமானது என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வழக்கறிஞர் தீபக் சுக்லா மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனது கட்சிக்காரர், மாலேகான் குண்டுவெடிப்புடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த வழக்கில் அடிபட்டு வரும் அபினவ் பாரத் அமைப்புடனோ அல்லது வேறு எந்த அமைப்புடனோ அல்லது இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எவருடனுமோ எனது கட்சிக்காரருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை.
எனவே எனது கட்சிக்காரரை மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக தொடர்படுத்திப் பேசினாலோ அல்லது எழுதினாலோ அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
எலக்ட்ரானிக் மீடியா, நாளிதழ்கள், பத்திரிகைகள், பொது ஜன தொடர்பு சாதனங்கள் மூலம், எனது கட்சிக்காரரின் பெயரை இதில் தொடர்புப்படுத்தி யாரும் பேசவோ, எழுதவோ, பேட்டி அளிக்கவோ கூடாது.
எனது கட்சிக்காரரை தொடர்புப்படுத்தி யாராவது செய்தி வெளியிட்டால், அது அவதூறான செயலாகும் என எச்சரிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் அடிபட்டு வரும் அபினவ் பாரத் அமைப்புக்கு தொகாடியா நிதியுதவி செய்தார் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் கைதாகியுள்ள லெப்டினென்ட் கர்னல் புரோஹித், சிபிஐயிடம் தெரிவித்த தகவலில், பிரனவ் பாரத் அமைப்பு வலுவான அமைப்பாக உருவாக தொகாடியா முக்கியப் பங்கு வகித்தார் என கூறியதாக செய்திகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியா மூலமே பிரக்யாவை தெரியும்-அத்வானி:
இதற்கிடையே மீடியாக்களில் வெளியான செய்திகளை வைத்துத்தான் பிரக்யா சிங் தாக்கூரை எனக்குத் தெரியும் என பாஜக தலைவரும், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இந்தூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையே தவறானது. அதை நான் ஆட்சேபிக்கிறேன். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது என்றார்.
சாகர் நகரில் நடந்த மற்றொரு கூட்டத்தில் அத்வானி பேசுகையில், மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள துறவி பிரக்யா சிங் தாக்கூர் தொடர்ந்து போலீஸாரால் சித்திரவதைப்படுத்தப்பட்டு வருகிறார்.
போலீஸ் சித்திரவதை குறித்து கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவின் நகலை பிரக்யா எனக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து நான் பிரதமர் மன்மோகன் சிங்குடனும் பேசியுள்ளேன் என்றார்.