சட்ட கல்லூரி: போலீசை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம்
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி வன்முறையின்போது போலீஸார் நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டபோது அதைத் தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸாரின் நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் அதிமுக இந்தப் போராட்டத்தை நேற்று நடத்தியது.
அதிமுக கொறடா ஜெயக்குமார் இதற்குத் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், தமிழகத்தின் வரலாற்றில் இது ஒரு கருப்பு தினமாகும். மனித உரிமை குறித்துக் கவலைப்படும் அனைவரும் இந்த சம்பவத்தைப் பார்த்தும், போலீஸாரின் செயலைக் கண்டும் உறைந்து போய் விட்டனர்.
இது மட்டுமல்லாமல், பசும்பொன்னுக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்றார் ஜெயக்குமார்.