10ம் வகுப்பு: அறிவியல், கணித பாடங்களில் கடின பகுதிகள் நீக்கம்
சென்னை: பத்தாம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதப் பாடப் பிரிவுகளில் கடினமானதாக உள்ளதாக புகார் கூறப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சென்னையி்ல் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசு பாடத் திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கணிதம், அறிவியல் பாடங்களில் கடினமான பகுதிகள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது குறித்து ஆய்வு செய்த போது கணிதம், அறிவியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பாடங்களில் மாற்றம் செய்வது குறித்து புத்தக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் அளித்த பரிந்துரையின் படி கணிதம், அறிவியல் பாடங்களில் கடினமான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் அரையாண்டு, முழு ஆண்டு தேர்வில் இருந்தே இந்த பாட நீக்கம் அமலுக்கு வருகிறது. மாநில கல்வி திட்டத்தின் படி 10-ம் வகுப்பு படிக்கும், மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
மழை நேரங்களில் அரசு விடுமுறை அறிவித்த பிறகும் விடுமுறை விடாத தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.