Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அருந்ததியருக்கு தாழ்த்தப்பட்டோர் கோட்டாவில் 3 % உள் இடஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருந்ததிய இன மக்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து 3 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டு கருணாநிதி பேசுகையில்,

நான் செய்த சாதனைகளால் ஒரு கோடீஸ்வரர், முன்பு கட்டியிருந்த வீட்டை விட இன்னும் நான்கு மாடி வைத்து வீட்டைக் கட்டியிருக்கிறார் என்றால்- அது என்னுடைய சாதனை அல்ல. எனக்கு ஏற்பட்ட சோதனைகளிலே ஒன்று. நான் அடைகின்ற வேதனைகளிலே ஒன்று. அதல்ல சாதனை.

பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், புழுக்களாய் இந்த உலகத்திலே ஏன் இந்த நாட்டிலே வாழுகின்ற ஏழையெளிய மக்கள், ஊனமுற்ற மக்கள், குருடாகிப் போன மக்கள், ஊமைகளாய் வாழ்கின்ற மக்கள் -அந்த மக்களுக்கெல்லாம் நல்லுயிர் கொடுத்து, நல்வாழ்வளித்து, அவர்களை நடமாடச் செய்வதை விட பெரிய சாதனை ஒன்றும் இருக்க முடியாது என்பதை கிருஸ்துவ மக்கள் கூடியிருக்கின்ற இந்த இடத்தில் சொல்வதைக் காட்டிலும் வேறு இடம் பொருத்தமாக இருக்க இயலாது.

என்னை ஆளாக்கிய தலைவர், அறிஞர் அண்ணா, 1969ம் ஆண்டு மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பு என் மீது திணிக்கப்பட்டு அந்தப் பொறுப்பையேற்று மக்கள் தொண்டனாக நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில், இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, கண்ணெளி முகாம்கள், கிராமத்திற்கு கிராமம், ஆயிரக் கணக்கான கிராமங்களில் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான கண் பார்வை இழந்த மக்களுக்கு கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி, கண்ணொளி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்தத் திட்டம் கூட எப்படி என் சிந்தையிலே உதித்தது என்றால் - நானே விபத்து ஒன்றில் சிக்கி, கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது நான் தங்கியிருந்த மருத்துவமனைக்குப் பக்கத்தில் அந்த நாட்டு மருத்துவர்கள் ஒன்று கூடி, பல முனைகளில் ஏழையெளிய மக்களுக்கு கண்ணொளி வழங்குகின்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

வேங்கடசாமி என்ற ஒரு கிருஸ்துவ நண்பர்தான் என்னோடு வந்த மருத்துவர். இதையே தமிழகத்தில் அரசின் சார்பாக ஏன் நடத்தக் கூடாது என்று அவர் கேட்டார். அப்போது நல்வாழ்வுத் துறை அமைச்சராக பேராசிரியர் அன்பழகனார் இருந்தார். அவரோடு கலந்து பேசி நாங்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த அரசின் திட்டம் தான் கண்ணொளி வழங்கும் திட்டம்.

லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி வழங்கிய திட்டம். நீங்கள் சொல்கின்ற சாதனைகளில் முதல் தரமான சாதனையாக அதைச் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்கும் அந்தச் சாதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதே போல பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தை கொண்டு வந்து ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை அதிலும் குறிப்பாக தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சென்னையிலே இருந்த 5000 கை ரிக்ஷாக் களையும், மதுரை, கடலூர் போன்ற இடங்களில் இருந்த கை ரிக்ஷாக் களையும் ஒழித்து விட்டு அதனை இழுத்தவர்களுக்கெல்லாம் பிழைப்புக்கு வழி காட்ட வேண்டுமென்பதற்காக அவர்களுக்கெல்லாம் இலவசமாக சைக்கிள் ரிக்ஷா கொடுத்த ஆட்சி தான் என்னுடைய தலைமையிலே அமைந்த ஆட்சி.

அந்தச் சாதனைகளின் வரிசையில் இன்னமும் வாய் திறந்திருந்தாலுங்கூட, பேச முடியாத, அழுத்திப் பேச முடியாத, உரிமை இல்லாத, அடிமைத்தனம் மிகுந்த மக்கள் நாட்டிலே இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்கள் கிருஸ்துவ மக்கள், இஸ்லாமிய மக்கள் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், எங்களுக்கு கல்வியில் உத்தியோகத்தில் உரிய இடம் தேவை என்று சொல்லி, அவர்கள் கோரிக்கை வைத்ததும், இல்லையென்று சொல்லாமல், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம், கிருஸ்துவர்களுக்கு 3.5 சதவீதம் என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பத்து நாளைக்குப் பிறகு திரும்ப வந்து பீட்டரும், சின்னதுரையும் ஏற்கனவே எங்களுக்கு இந்த உரிமைகள் எல்லாம் கிடைத்திருக்கின்றன, இன்னமும் கிடைக்கவிருக்கின்றன, நீங்கள் அளித்துள்ள சலுகையினால் எங்களுக்கு நன்மை இல்லாவிட்டாலும் தீமை வராமல் இருக்க வேண்டுமல்லவா? ஆகவே இந்தச் சலுகையை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். கணக்கிட்டுப் பார்த்தோம், சிந்தித்துப் பார்த்தோம், விவாதித்துப் பார்த்தோம்.

அவசரப்படவில்லை, ஒரு நாள், இரண்டு நாள் விவாதித்து அதற்குப் பிறகு பீட்டரும், சின்னதுரையும் மாத்திரம் சொன்னால் போதாதென்று, ஆயர் பெருமக்கள் அனைவரையும் அழைத்து பேசினோம். அவர்கள் யாருக்காவது மாறுபட்ட கருத்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விசாரித்தோம்.

ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், அதை மீறி நான் நடக்க முடியாது என்ற காரணத்தால், அத்தனை பேருடைய எண்ணத்தையும் அறிந்து இன்றுள்ள, அதே பழைய நிலையிலேயே அவர்களை 3.5 சதவிகிதம் என்ற அந்தச் சலுகையைத் திரும்பப் பெற்று, பழைய நிலையிலேயே அவர்களை வைத்திருக்கிறோம்.

கடைசியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அருந்ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப்பட்டு அது குறித்த அறிக்கையைத் தந்திருக்கிறார். அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற அமைச்சரவை கூட்டத்திலே ஆலோசித்து, விவாதித்து, அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு செயலாளர்கள் என்னிடம் பேசும்போது, இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள். அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள், கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள், மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்டரகமாக ஆக்கப்பட்ட மக்கள் - அந்த மக்களைக் கைதூக்கி விடுவது தான் இந்தக் கருணாநிதியின் வேலை. இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

அந்தச் சாதனையிலே, சரித்திரத்திலே இதுவரையில் இடம் பெறாமல் இருப்பது இந்த அருந்ததி மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களை கை தூக்கி விடாமல் இருப்பது தான், நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது, கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய, அச்சடிக்கப் பட வேண்டிய செய்தி, அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம் பெற வேண்டுமென்று சொன்னேன். அந்தச் சாதனையும் முற்றுப் பெறவிருக்கிறது என்றார் கருணாநிதி.

அருந்ததிய இனத்தில் சக்கிலியர், மதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய சமூகங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடுக்கப்பட்ட இந்த சமுதாய மக்கள் நீண்ட காலமாகவே தங்களுக்கு தனி உள் இட ஒதுக்கீடு கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+