யுஎஸ் தூதர் வீட்டு பாதுகாப்பு-வராத போலீஸார்
சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 போலீஸார் சொல்லாமல் கொள்ளாமல் பணிக்கு வராததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அபிராமபுரம் டர்ன்புல்ஸ் ரோட்டில் வசிக்கும் அமெரிக்க துணைத் தூதரின் வீட்டுக்கு ஷிப்ட் முறையில் 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அங்கு எப்போதும், இயந்திரத் துப்பாக்கியோடு ஆயுதப்படை போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி வரை அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த 3 போலீஸார் வரவில்லை.
தினசரி, இப்பாதுகாப்புப் பணியை தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ரவீந்திரன் நேரடியாக சென்று கண்காணிப்பார்.
நேற்று காலை அவர் வந்தபோது, பாதுகாப்பு போலீசார் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஆயுதப்படையைச் சேர்ந்த வேறு 3 போலீஸார் அங்கு பணி அமர்த்தப்பட்டனர்.
சொல்லாமல், கொள்ளாமல் பணிக்கு வராமல் இருந்த அந்த 3 காவலர்கள் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 பேருக்கும் விளக்கம் கேட்டு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
துணைத் தூதர் அலுவலக பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடியால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.