மூளைச்சாவு: மகன் தூண்டுகோலால் தாயின் உடல் உறுப்புகள் தானம்!
திருச்சி: மூளைச்சாவால் செயலிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள், அவரது மகனின் தூண்டுகோலால் தானம் செய்யப்பபட்டன.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வெள்ளைய கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மருதை (37). தச்சர். இவரது மனைவி சாந்தி(35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களில் சுரேஷ்(14) 8-ம் வகுப்பும், கோமதி 2-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சாந்திக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சாந்தியை திருச்சி ஏ.பி.சி.ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு நேற்று இரவு மூளைச்சாவு ஏற்பட்டது.
தாய் சாந்தியின் நிலையை எண்ணி மனம் கலங்கிய அவரது மகன் சுரேஷ் தனது தந்தை மருதையிடம் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் தனது தாயின் உறுப்புகள் இவ்வுலகில் மீண்டும் வாழ வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக் கூறினான்.
இதனை கேட்ட அவனது தந்தை கண்கலங்கி சாந்தியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தார். அதன் பின்னர் சாந்தியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகங்கள், இருதய வால்வு ஆகியவைகளை ஏ.பி.சி.ஆஸ்பத்திரி டாக்டர் வேலு அரவிந்த் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தார்.
அந்த உறுப்புகள், உடல் உறுப்பு செயலிழந்து ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன.
தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய தந்தைக்கு மகன் எடுத்துக் கூறி செய்ய வைத்த சம்பவம் கரூர், திருச்சியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications