அத்வானி இந்திய 'ஜான் மெக்கெய்ன்?'-பாஜக பாய்ச்சல்
சென்னை: தமிழினம், தமிழ் மொழி என்று சொல்லிக் கொண்டு மக்களை கருணாநிதி இனியும் ஏமாற்ற முடியாது என பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கை பிரச்சனையில் ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக எம்பிக்கள் 40 பேரும் ராஜினாமா செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதிலிருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பின்வாங்கின.
அதன் பின்னர் கருணாநிதி, மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறிக் கொண்டு ராஜினாமா முடிவிலிருந்து பின் வாங்கினார்.
இந் நிலையில் இன்று மீண்டும் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை அவர் கூட்டியிருக்கிறார். தமிழினம், தமிழ்மொழி என்று சொல்லி மக்களை அவர் இனியும் ஏமாற்ற முடியாது. இன்றைய கூட்டத்தில் எடுக்கும் முடிவையும் மக்கள் நம்பப் போவதில்லை.
தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. ஓராண்டு ஆகியும் மின்வெட்டு பிரச்சனை தீர்க்கப்படவில்லை. சட்டக் கல்லூரி மாணவர் கலவரத்தில் காவல்துறை செயலற்று நின்றதை உலகமே தொலைக்காட்சிகளில் பார்த்தது. நேற்றைக்கு சடலங்களை மாற்றி கொடுத்ததன் மூலம் மருத்துவத் துறையும் சரிவர செயல்படவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
மழையால் 2.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மொத்தத்தில் தமிழக அரசு தேக்க நிலையை அடைந்துள்ளது. இதிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக கருணாநிதி இலங்கை பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு இன்றைய கூட்டத்தை நடத்துகிறார். இலங்கை பிரச்சனையில் கருணாநிதி அரங்கேற்றி இருக்கும் எத்தனையாவது நாடகம் இது என்று சொல்ல முடியவில்லை.
நெருப்புக்கோழி தனது முகத்தை பூமிக்குள் புதைத்துக்கொண்டு எதுவும் நடக்கவில்லை என்று சொல்வதுபோல, நமது நாட்டிற்கு சர்வதேச பொருளாதார பின்னடைவால் பாதிப்பு இல்லை என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொல்கிறார்.
தொழிலதிபர்களுடன் அத்வானி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அத்வானியை இந்தியாவின் 'ஜான் மெக்கெய்ன்' (அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்துத் தோற்றவர்) என்று அகம்பாவத்துடன் சிதம்பரம் கூறியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.
மாலேகான் பிரச்சனையில் இந்து மதத்தையும் ராணுவத்தையும் களங்கப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் நடந்து கொள்கின்றன.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி குறித்து டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications