மழையில் கரைந்த உப்பளங்கள்-50000 பேர் வேலை இழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை நீடித்து வருகிறது. அதிலும் கடந்த 5 தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பிரதான தொழிலான உப்பு தொழில் அடியோடு முடங்கி விட்டது.
இந்த ஆண்டு மட்டும் 4 முறை மழையினால் உப்பளங்கள் அழிந்துள்ளன. தற்போதும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர பரப்பில் உற்பத்தி செய்யப்பட்டிருந்த உப்பளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இதனை நம்பியுள்ள 25,000 தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. தீப்பெட்டி உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்த தொடர் மழையினால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி விட்டது.
சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தூத்துக்குடி நகரில் பிரதான சாலைகள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications