டிச. 10ல் சட்டக் கல்லூரி தேர்வுகள்
சென்னை: நவம்பர் 12ம் தேதி நடந்த மாணவர்கள் மோதலைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை சட்டக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அம்பேத்கர் சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக தொடரப்பட்டுள்ள ரிட் மனுக்களை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதுதொடர்பான வாய்மொழி உத்தரவை இன்று பிறப்பித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கும். அதற்கு முன்பாக பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தப்படும்.
தங்களது பிள்ளைகள் இனிமேல் தவறாக நடக்க மாட்டார்கள் என அப்போது பெற்றோர்களிடம் உறுதிமொழி கேட்டு வாங்கப்படும்.
அதேபோல தேர்வுகள் முடிந்து வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவும், பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தப்படும்.
கடும் கண்காணிப்புக்கு கீழ் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
கல்லூரியைத் தவிர வேறு மையங்களிலும் தேர்வுகளை நடத்தலாம் என்று முன்னாள் அட்வகேட் ஜெனரல் என்.ஆர்.சந்திரன் மற்றும் மூத்த வழக்கறிஞறும், சிபிஐ சிறப்பு வழக்கறிஞருமான சந்திரசேகர் ஆகியோர் அளித்துள்ள பரிந்துரைகளை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கையை எடுக்க கல்லூரி முதல்வருக்கு உத்தரவிடுகிறோம்.
கல்லூரியில் போதிய ஆசிரியர்கள் இருக்க வேண்டும். வகுப்புகள் முறையாக நடக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை அளிக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்.
கல்லூரியில் ஒரே ஒரு வாசல் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
கல்லூரிக்கும், கல்லூரி விடுதிக்கும் போதிய அளவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் இருப்பது அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது. மேலும் ஆசிரியர்கள் காலியிடத்தையும் நிரப்பாமல் உள்ளது சரியல்ல.
பத்திரிகைகளுக்கு அறிவுரை:
செய்தியாளர்கள், பெஞ்சுக்கும் (நீதிபதிகள்) மற்றும் வக்கீல்களுக்கு இடையே நடக்கும் வாதங்களை செய்திகளில் தராமல் தவிர்க்க வேண்டும். சமூக நலனைக் கருதி இதை அவர்கள் செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவுகளை மட்டும் செய்தியாக வெளியிட்டால் போதுமானது.
இந்த வழக்கு தொடர்பான விரிவான தீர்ப்பு டிசம்பர் ஒன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications