சோமாலியா கடற் கொள்ளையர்கள் அட்டகாசம் - 25 இந்தியர்களுடன் கப்பல் கடத்தல்
மும்பை: இந்திய கடற்படை ரோந்துக் கப்பல் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்ததை பயன்படுத்திக் கொண்டு, ஏடன் வளைகுடா பகுதியில், 25 இந்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடன் வந்து கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பலை சோமாலியா கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர்.
எம்.டி. பிஸ்காக்லியா என்ற பெயருடைய அந்தக் கப்பல் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தோனேசியாவுக்கும் - ஐரோப்பாவுக்கும் இடையிலான சரக்குக் கப்பல். வேதிப்பொருட்கள் அடங்கிய டேங்கர் கப்பல் அது.
25 இந்தியர்கள், 3 வங்கதேசத்தவர், 2 இங்கிலாந்துக்காரர்கள் மற்றும் ஒரு அயர்லாந்து ஊழியர் அதில் உள்ளனர்.
இக்கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கடற் கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கடத்திச் சென்று விட்டனர்.
இந்திய கப்பல் இல்லாத நேரமாக பார்த்து ..
ஏடன் வளைகுடா பகுதியில் கடற் கொள்ளையர்களின் அட்டகாசத்திற்கு சிம்ம சொப்பனமாக இந்திய கடற்படை போர்க் கப்பல் உள்ளது. பல கடத்தல்களை இந்தக் கப்பல் தடுத்து காப்பாற்றியுள்ளது.
இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக செயல்பட்டு வரும் கடற்படைக் கப்பல், பல நாட்டுக் கப்பல்களையும் காப்பாற்றி வருகிறது.
நேற்று லைபீரிய கப்பல் கடத்தப்பட்டபோது, இந்திய கடற்படை போர்க் கப்பல் எரிபொருள் நிரப்பப் போயிருந்தது. அந்த சமயமாகப் பார்த்து சோமாலியா கடற் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டி விட்டனர்.
கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச கடற்கொள்ளைத் தடுப்பு வாரியத்திற்குத் தகவல் தரப்பட்டது. அதேபோல இந்தியக் கடற்படை கப்பல் மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவற்றுக்கும் தகவல் தரப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோலாலம்பூர் வாரியம், ஏடன் வளைகுடாப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டுள்ள கூட்டுப் படையினருக்குத் தகவல் கொடுத்து. அவர்கள் உடனடியாக இரு ஹெலிகாப்டர்களை அனுப்பி தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஆனால் அதற்குள் லைபீரியக் கப்பலை தங்களது பகுதிக்குள் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கொண்டு சென்று விட்டனர். தற்போது கப்பல் எங்குள்ளது என்பது தெரியவில்லை. கொள்ளையர்களே கூறினால்தான் உண்டு.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி எம்.டி. ஸ்டோல்ட் வாலர் என்ற கப்பலை கொள்ளையர்கள் கடத்தினர். அதில் 18 இந்தியர்கள் இருந்தனர். 2 வாரங்களுக்கு முன்புதான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், ஹாங்காங்கைச் சேர்ந்த டிலைட் என்ற கப்பலையும், கடந்த வாரம் சோமாலியா கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டனர். அதில் 7 இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.
இந்த நிலையில் 25 இந்தியர்களுடன் ஒரு கப்பலை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.