சிபிஎம் பொலிட்பீரோ-அதிமுகவுடன் கூட்டணி வருமா?
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் பொலிட்பீரோ கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் புதிய அரசியல் கூட்டணிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவுள்ளது.
17 பேர் கொண்ட சிபிஎம் பொலிட்பீரோ கூட்டம் இன்று காலை கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் இன்று கூடியது.
இக்கூட்டத்தில் அரசியல் சூழ்நிலைகள், ஆறு மாநில சட்டசபைத் தேர்தல், புதிய தேர்தல் கூட்டணிகள், உலகப் பொருளாதார நிலைமை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தி்ல சீதாரம் எச்சூரி, பிருந்தா காரத், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநில முதல்வர்கள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய கூட்டம் தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடருவதா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதே இதற்குக் காரணம்.
ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கான உத்திகள், கூட்டணிகள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக முடிவெடுக்கப்படவுள்ளது.