சட்டமன்றத் தேர்தல்-டெல்லியில் வாக்குப் பதிவு
டெல்லி: மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், டெல்லி சட்டசபைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. 69 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மொத்தம் 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இவர்களில் 40.7 லட்சம் பேர் பெண்களாவர். 863 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராஜேந்திரா நகர் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரத்து 676 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதுதவிர 317 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டன.
மிக பலத்த பாதுகாப்பு:
தேர்தலையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
51 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உஷார் நிலையில் என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள்:
போலீஸார் தவிர என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலியாக முன்னெச்சரிக்கையாக, என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக செயல்படக் கூடிய வகையில் ஒரு யூனிட் என்.எஸ்.ஜி. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மிக மிக முக்கியப் பிரமுகர்கள் அதிகம் இருப்பதால் இந்த முன்னேற்பாடு என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் மயமாக காணப்படுகிறது.
முக்கிய கட்டடங்கள், அரசு அலுவலகங்கள், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து நாட்டு தூதரக அலுவலகங்கள், தூதர்களின் இல்லங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தூதரகங்கள் நிரம்பியுள்ள சாணக்கியபுரி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள், இரு விமான நிலையங்கள், பஸ் நிலையம், மார்க்கெட்கள், வணிக வளாகங்களும் பாதுகாப்பு போர்வையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.