தாஜ் தாக்குதல்: 150 பேரை காப்பாற்றிய தெ. ஆப்பிரிக்க கமாண்டோக்கள்
மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்குப் பாதுகாப்பாக வந்த இடத்தில், தாஜ் ஹோட்டலில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த நேரத்தில், சமயோஜிதமாக செயல்பட்டு நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றி பெரும் சேவையைச் செய்துள்ளனர் தென் ஆப்பிரிக்க கமாண்டோ வீரர்கள்.
சாம்பியின்ஸ் லீக் 2020 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மும்பை வந்துள்ளது. தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தத் தொடர் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய வேளையில், தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பாதுகாப்பாக வந்திருந்த 6 தென் ஆப்பிரிக்க கமாண்டோ வீரர்கள், தாஜ் ஹோட்டலின் மாடியில் உள்ள ஹோட்டலில் இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து சமயோஜிதமாக செயல்பட்ட 6 கமாண்டோ வீரர்களும், சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை துரிதமாக வெளியேற்ற உதவினர்.
கிட்டத்தட்ட 150 பேரை அந்த ஆறு பேரும் சேர்ந்து பத்திரமாக வெளியேற்ற உதவியுள்ளனர்.
இதுகுறித்து கமாண்டோ படையில் இடம் பெற்றிருந்த வீரர்களில் ஒருவரான பாப் நிக்கோல்ஸ், கூறுகையில், நாங்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது துப்பாக்கிச் சத்தம் கேட்டது.
ஹோட்டல் லாபியில் இரு பிரிவினருக்கிடையே துப்பாக்கிச் சண்டை நடப்பதாக எங்களுக்குத் தகவல் வந்தது.
ஆனால் சிறிது நேரத்தில், குண்டுச் சத்தம் கேட்டது. இதையடுத்து நடப்பது தீவிரவாத தாக்குதல் என உணர்ந்து கொண்டோம்.
ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொண்டு வருவதையும் பார்த்தோம். அவர்கள் கையெறி குண்டுகளையும் சரமாரியாக வீசி வெடிக்கச் செய்தனர்.
அந்த இடமே பாதுகாப்பற்றதாக மாறியுள்ளதை உணர்ந்து கொண்டோம். இதையடுத்து எந்த வகையில் மக்களை காப்பாற்றுவது என்று யோசித்தோம்.
முதலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் நாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இதனால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் எங்களுக்கு வெளியிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அந்த நேரத்தில் எங்களுக்கு கிடைத்த வழிகளைப் பயன்படுத்த முடிவு செய்தோம்.
அந்த ரெஸ்டாரென்ட் முழுவதும் கண்ணாடி ஜன்னல்களாக இருந்தது. அடுத்த அறையில் மாநாட்டு அரங்கம் இருப்பதைப் பார்த்தோம். இதையடுத்து அனைவரையும் மாநாட்டு அரங்குக்கு அனுப்பினோம். அவர்களுக்குத் துணையாக நாங்களும் சென்றோம்.
ரெஸ்டாரென்ட் கதவு வழியாக தீவிரவாதிகள் வந்து விடாமல் தடுக்கத் தேவையான முன்னேற்பாடுகளையும் செய்தோம். ஹோட்டலின் சமையல் அறையில் நுழைந்து அங்கு கிடைத்த கத்திகள், அரிவாள்கள் என எல்லா வகையான ஆயுதங்களையும் கையில் எடுத்துக் கொண்டு தயார் நிலைக்கு வந்தோம்.
பின்னர் போலீசாருடன் தொலைபேசியில் பேசி மாநாட்டு அரங்கத்தில் இருந்த ஜன்னலில் ஏணிகளை வைக்கச் சொன்னோம். அந்த ஏணிகள் வழியாக அனைவரையும் கீழே இறக்கினோம்.
நீங்கள் லாபி வழியாக நடந்து படிக்கட்டுகளில் வந்திருந்தால் நிச்சயம் அனைவரும் குண்டுகளுக்கு இறையாகியிருப்போம் என்றார்.