தீவிரவாதிகள் பிடியிலிருந்து மீண்ட சி.சுப்ரமணியம் பேரன்
கோவை: மும்பை தீவிரவாதத் தாக்குதலிலிருந்து முன்னாள் மகாராஷ்டிர ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மறைந்த சி.சுப்ரமணியத்தின் பேரன் விக்ரம் ராமகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
மறைந்த சி.சுப்ரமணியத்தின் பேரன் விக்ரம் ராமகிருஷ்ணன். இவர் மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது ஓபராய் ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது தீவிரவாதிகள் தாக்குதலில் இறங்கினர். இதனால் அவர் ஹோட்டலை விட்டு வெளியே வர முடியாமல் போனது. கிட்டத்தட்ட 48 மணி நேரம் அவர் தனது அறைக்குள்ளேயே முடங்கியிருந்தார். நேற்று காலைதான் அவரை என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் மீட்டு வெளியேற்றியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் சொந்த ஊரான கோவை திரும்பினார். விமான நிலையத்தில் அவரது மனைவி ச்திரா, மகள்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் விக்ரம் கூறுகையில், உயிருடன் மீண்டது மகிழ்ச்சி தருகிறது.
நான் கிட்டத்தட்ட 48 மணி நேரம் அறையை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கிப் போயிருந்தேன். வெளியில் துப்பாக்கிச் சண்டை கடுமையாக இருந்தது. அவ்வப்போது கையெறி குண்டுகளின் சத்தமும் காதைப் பிளந்தது.
21வது மாடியில் இருந்த எனது அறை விளக்குகளை அணைத்து விட்டு இருட்டுக்குள்ளேயே இருந்தேன். சாப்பாட்டுக்கு எதுவும் இல்லை. வெறும் பழச்சாறைக் குடித்தபடி உயிரைக் கையில் பிடித்தபடி இருந்தேன்.
எனது குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசியபடி இருந்தது ஆறுதலாக இருந்தது.
நேற்று காலைதான் என்னை கமாண்டோப் படையினர் மீட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications