ஜெகதாப்பட்டனம் மீனவர்களைக் கடத்திய இலங்கை
புதுக்கோட்டை: கடலில் தத்தளித்த மீனவர்களைக் காப்பாற்றச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கடத்திச் சென்று விட்டது. இதைக் கண்டித்து மீனவர்கள் ஸ்டிரைக்கில் குதித்துள்ளனர்.
ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களது படகு பழுதடைந்தது. இதையடுத்து அவர்கள் கரையில் இருந்த மீனவர்களுக்குத் தகவல் அனுப்பினர்.
இதையடுத்து நான்கு மீனவர்கள் இன்னொரு விசைப் படகில் கடலுக்குச் சென்றனர். அங்கு படகை பழுது பார்த்து விட்டு அனைவரும் திரும்ப முயன்றபோது, பழுது பார்ப்பதற்காக சென்ற நான்கு மீனவர்களையும், அவர்களது படகையும் இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை மீட்கக் கோரி ஜெகதாப்பட்டனம் இயந்திரப் படகு நலச் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக 300க்கும் மேற்பட்ட படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.