மும்பை தாக்குதல்: டாடா-ஏஐஜி, ஓரியன்டல் இன்சூரன்ஸுக்கு நஷ்டம்

இரு நட்சத்திர ஹோட்டல்களும் மேற்கண்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பெரும் தொகைக்கு இன்சூர் செய்யப்பட்டுள்ளன. அதுவும், தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக இந்த இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரு இன்சூரன்ஸ் நிறுவனங்களும் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டியுள்ளது.
இரு ஹோட்டல்களையும் சீரமைக்கும் பணிக்கு இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செலவிட வேண்டியிருக்கும்.
இரு ஹோட்டல்களுக்கும் எவ்வுளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் மதிப்பிடப்படவில்லை.
தாஜ் ஹோட்டலின் முதன்மை இன்சூரன்ஸ் நிறுவனம் டாடா ஏஐஜி ஆகும். தாஜ் மற்றும் டாடா ஏஐஜி இரண்டுமே ரத்தன் டாடாவுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஒரு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இன்னொரு நிறுவனம் ஈடு செய்ய வேண்டிய நிலை.
ஓபராய் ஹோட்டல், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் எடுத்துள்ளது.
இவை தவிர ஐசிஐசிஐ லம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 30 சதவீத இன்சூரன்ஸும், இப்கோ - டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 5 சதவீத இன்சூரன்ஸையும் தாஜ் ஹோட்டல் எடுத்துள்ளது.
ஓரியன்டல் தவிர சென்னையைச் சேர்ந்த யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடமும் ஓபராய் ஹோட்டல் குறிப்பிட்ட சதவீதத்திற்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளது.
கட்டடங்களின் மறு சீரமைப்புக்குப் பணம் தருவதுடன் இரு ஹோட்டல்களுக்கும் ஏற்பட்ட வர்த்தக இழப்பையும், இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஈடு கட்ட வேண்டும்.
நாட்டில் உள்ள பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தீவிரவாத எதிர்ப்பு இன்சூரன்ஸ் தொகையாக தற்போது ரூ. 1000 கோடி வரை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான இன்சூரன்ஸ் போலத்தான் இந்த தீவிரவாத தடுப்பு இன்சூரன்ஸும். தீவிரவாத நடவடிக்கைகளால் பொருட்களுக்கும், சொத்துக்களுக்கும், கட்டடங்களுக்கும் ஏற்படும் இழப்பை இந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஈடு கட்டும். வர்த்தக இழப்பீட்டையும் அவை வழங்கும்.












Click it and Unblock the Notifications