எப்.பி.ஐ அதிகாரிகளைக் 'கைது' செய்த போலீஸ்!
மும்பை: மும்பைக்கு தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்திய விசாரணைக்கு உதவுவதற்காக வந்த அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் இருவரை மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக கைது செய்தனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையில் இந்தியாவுக்கு உதவ 7 பேர் கொண்ட எப்.பி.ஐ அதிகாரிகள் நேற்று மும்பை வந்தனர்.
அவர்களில் 5 பேர் முன் கூட்டியே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து விட்டனர். பின்னால் வந்த இரண்டு பேரின் பைகளில் சில கருவிகள் இருந்தன.
இதைப் பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் எப்.பி.ஐ அதிகாரிகள் எனத் தெரியாமல் இருவரையும் கைது செய்து விட்டனர்.
தங்களுக்குப் பின்னால் வந்த இருவரையும் காணவில்லை என்பதை அறி்நத முன்னால் சென்ற எப்.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே வந்து விசாரித்தபோதுதான் நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் தாங்கள் யார் என்பதைச் சொல்லி இருவரையும் மீட்டு வெளியேறினர் எப்.பி.ஐ. குழுவினர்.
எப்.பி.ஐ. குழுவினர் வருவதைக் கூட சரிவரத் தெரிவிக்காமல் விமான நிலைய அதிகாரிகள் செய்த குழப்பத்தால் இந்த சொதப்பல் ஏற்பட்டு விட்டது.
இதையடுத்து இந்தக் குழுவினர் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று தடயவியல் சோதனைகளில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய போலீஸ் குழு:
இந் நிலையில் இந்த விசாரணைகளில் எந்தெந்த தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்புள்ளது என்பது குறித்த விசாரணையில் இந்தியாவுக்கு உதவ ஆஸ்திரேலியாவில் இருந்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகள் மும்பை வந்துள்ளனர்.