மெத்தனமாக இருந்து விட்டது அரசு: சோனியா கடும் பாய்ச்சல்
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதித்ததை தவிர்த்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும் வகையில் அரசு செயல்பட வேண்டும். நமக்காக ஒரு அரசு உள்ளது என்று மக்கள் உணரும் வகையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இவ்வாறு சோனியா காந்தி பேசியுள்ளார். அரசு தீவிரவாதிகளைத் தடுக்கத் தவறி விட்டதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரியக் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், நமது முதல் கடமை, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுதான்.
நமக்காக ஒரு அரசு உள்ளது என்று மக்கள் நம்ப வேண்டும். நமது பிரச்சினைகளை தீர்த்து, நம்மை அது பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் உணர வேண்டும். மேலும், இதுபோன்ற கொடூரமான தாக்குதல்கள் இனிமேலும் நடக்காமல் அரசு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மும்பையில் நடந்துள்ள தீவிரவாத தாக்குதல், இதற்கு முந்தைய தாக்குதல்களை விட முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. இதுதொடர்பாக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காக்க அரசு விரைவான, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நம்மிடம் இருந்த மெத்தனப் போக்குதான் இந்த சம்பவத்திற்குக் காரணமாகி விட்டது. என்ன மாதிரியான நடவடிக்கைகள், மாற்றங்கள் தேவை என்பதை அறிந்து அவற்றை உடனடியாக கொண்டு வந்து, இதுபோன்ற சவால்களை எதிர்காலத்தில் நாம் முறியடிக்க வேண்டும்.
மும்பையில் நடந்த தாக்குதல் நமது நாட்டின் மீதான தாக்குதலாகும். நமது சமூக கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சியாகும்.
இந்த சக்திகள் யார் என்பதை நாம் விரைவில் கண்டறிந்து, யார் இதை அரங்கேற்றியதை என்பதை கண்டறிந்து, அவர்களது நோக்கத்தை நாம் முறியடிக்க வேண்டும்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நாம் நீண்ட காலம் அமைதி காத்துக் கொண்டிருக்க முடியாது. நம்மைத் தாண்டி தாக்குதல்கள் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிரான நமது பதில் உறுதியானதாகவம், இறுதியானதாகவும் இருக்க வேண்டும்.
உடனடியாக நாம் செய்ய முடிபவற்றை உடனடியாக நாம் செய்தாக வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான நீண்ட கால நடவடிக்கைகளை உடனடியாக திட்டமிட வேண்டும். தேவையான சீர்திருத்த, மாற்ற நடவடிக்கைகளை நாம் திட்டமிட வேண்டும்.
நமது காவல்துறை, பாதுகாப்புப் படையின் வலிமையைக் கூட்டத் தேவையானவற்றை நாம் செய்தாக வேண்டும். இதுபோன்ற சவால்களை சமாளிக்கக் கூடிய வலிமையை நமது பாதுகாப்புப் படைக்கு நாம் அளித்தாக வேண்டும்.
தீவிரவாத விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசியல் நோக்கத்தை மறந்து விட்டு ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். பிரிவினைவாத சக்திகள் நம்முள் புகுந்து விட அனுமதிக்கக் கூடாது.
ஆனால் நமது அரசியல் கட்சிகள் சில அப்படி செய்ய முன்வருவதில்லை. பதிலாக, மும்பை தாக்குதல் சம்பவத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள அவை முயலுகின்றன.
தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயலக் கூடாது. அதற்கு எதிராக காங்கிரஸ் உறுதியாக இருக்க வேண்டும் என்றார் சோனியா காந்தி.












Click it and Unblock the Notifications