இலவசத் திட்டங்களால் சமூகம் முன்னேறாது: சிவகாமி
நெல்லை: இலவசத் திட்டங்களால் சமுதாய முன்னேற்றம் ஏற்படாது என சமீபத்தில் அரசியலில் குதித்தவரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான சிவகாமி கூறியுள்ளார்.
நெல்லையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொது செயலாளர் சிவகாமி பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அரசியல் பின்புலம் இல்லாமல் அரசு அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட முடியாது. மக்களின் ஓட்டுக்கு பயப்படும் அவர்கள் அதிகாரிகளை மதிப்பதில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் நலனுக்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளேன்.
பல கிராமங்களில் வீடு, விவசாய நிலம், சுடுகாடு இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அரசியல் ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்டு வருபவர்களுக்கு கல்வியும், நிலமும் வழங்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
தாழ்த்தப்பட்டவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கென பிரத்யேக திட்டங்கள் கிடையாது.
இலவச திட்டங்கள் என்ற மாயையில் மக்கள் சிக்கியுள்ளனர். இதனால் எவ்வித சமுதாய முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை. இலவச அரிசிக்கு பதிலாக விவசாயம் செய்ய நிலத்தை அளித்தால் போதும்.
தமிழகத்தில் ஆதிதிராவிட நலப்பள்ளிகள் போதிய ஆசிரியர் இல்லாமல் சீர்கெட்டு போய் உள்ளன. இதுபோல் உண்டு உறைவிட பள்ளிகளும் செயல் இழந்துவிட்டன.
எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். தலைமை அனுமதியளிக்கும் பட்சத்தில் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.
கிராமங்கள் அளவில் தொண்டர்கள் இருக்கும் கட்சி வலுவானதாக இருக்கும். எனவே ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
தலித் அமைப்புகளை ஒருங்கிணைப்பதோடு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வோம்.
அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்பு கருத்து தெரிவிப்பேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications