பாக்.கில் தீவிரவாதிகளை தாக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு-ஓபாமா
சிகாகோ: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் முழு அளவில் உதவ வேண்டும் என அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளார்.
சிகாகோவில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் ஒத்துழைப்போம் என பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளது. அதை முழு அளவில் செயலிலும் காட்ட வேண்டும் என்றார்.
பாகிஸ்தானில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அந்த நாட்டின் அனுமதி இல்லாமலேயே இந்தியா தாக்க அதிகாரமுள்ளதா என்று கேள்விக்கு பதிலளித்த ஓபாமா,
சுதந்திரமான, இறையாண்மை கொண்ட எல்லா நாடுகளுக்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. இந்த விஷயத்தில் இதற்கு மேல் விரிவாக நான் பதில் சொல்ல விரும்பவில்லை. இப்போதைக்கு விசாரணைகள் நடக்கின்றன. தாக்குதலுக்கு யார் காரணம் என்பதை அவர்கள் உறுதி செய்வார்கள்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர்களைப் பிடிக்க இந்தியாவுக்கு எனது தலைமையில் அமையும் நிர்வாகம் முழு அளவில் உதவி செய்யும். பலியான இந்தியர்களுக்கு என ஆழ்ந்த அஞ்சலி, அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதல் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சி்ங்குடன் பேசினேன். வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைசும் எனக்கு அவ்வப்போது விவரங்கள் தந்து கொண்டிருக்கிறார்.
இப்போது அதிபர் புஷ் மிக முக்கியமான சில தூதரக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். காண்டலீஸா ரைசை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு உதவியாக இருப்போம்.
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். இதற்காக ராணுவத்தை மட்டுமல்ல நமது பொருளாதார, தூதரக, அரசியல் பலத்தையும் முழு அளவில் பயன்படுத்துவேன். நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறேன் என்றார்.
இதற்கிடையே இன்று இந்தியா வரும் காண்டலீஸ்ஸா ரைஸ் நாளை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கிறார்.
அவரை மும்பைக்கும் அழைத்துச் சென்று அங்கு நடந்த வெறியாட்டத்தை நேரில் காட்ட மத்திய அரசு முயலலாம்.












Click it and Unblock the Notifications