'அம்மா' பேச்சை கேட்கும் இளங்கோவன்- திருமா!
சென்னை: மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அம்மா (ஜெயலலிதா) பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
முதல்வர் கருணாநிதி தலைமையில், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் செல்லும் குழுவில் நான் செல்ல இருக்கிறேன். ஆனால், நான் இந்தக் குழுவில் இடம் பெறக் கூடாது என்று என்னைப் பற்றி மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
நான் கலந்து கொள்ள கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவோ, அகில இந்திய தலைவர் சோனியா காந்தியோ கூறவில்லை. இளங்கோவனின் பேச்சு, திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்கிறது.
அவரது தலைவர் சோனியா காந்தியின் பேச்சை கேட்டு அவர் கருத்து தெரிவித்த மாதிரி தெரியவில்லை. இங்கே உள்ள 'அம்மா'வின் பேச்சை கேட்டு கருத்து தெரிவித்த மாதிரி இருக்கிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் செல்லும் குழுவில் அதிமுக, மதிமுக பங்கேற்காதது வேதனையாக இருக்கிறது. அவர்களின் நிலைப்பாடு தி.மு.க.வுக்கு எதிராக அமையாது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக தான் அமையும்.
இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிவாரண நிதி ஈழத் தமிழர்களை சென்று சேரவில்லை என்று தகவல்கள் வருகிறது. இந்திய அரசு தனது பிடிவாத போக்கை விட்டு விட்டு, சிங்கள ராணுவத்திற்கு உதவிகளை செய்வதை விட்டு, விட்டு தமிழர்களை காக்க வர வேண்டும்.
தங்கள் அமைப்பு மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் வேண்டுகோளை இந்திய அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும்.
நாட்டில் நிலவி வரும் மோசமான நிகழ்வுகளை கருத்தில் கொண்டு எங்களது அயோத்தி பயணத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகளின் இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாடு 26ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications