அடுத்த வாரம் பெட்ரோல் - டீசல் விலைக் குறைப்பு?
டெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை அடுத்த வாரத்தில் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
6 மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என சமீபத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்திருந்தார்.
இதில் டெல்லி, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மிஜோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டது. இவற்றின் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியாகி விடும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் டிசம்பர் 24ம் தேதிதான் தேர்தல் முடிகிறது.
இதையடுத்து அடுத்த வாரத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலைக் குறைப்பை மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், காஸ் சிலிண்டர் விலை ரூ. 20ம் குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
டிசம்பர் 11ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணை நிறுவனங்கள் லாபத்தி்ல விற்பனையை மேற்கொண்டு வருகின்றன. பெட்ரோல் லிட்டருக்கு 14.89 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.03 ரூபாய் லாபத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை வெகுவாக குறைந்ததும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததுமே இற்குக் காரணம்.
இருப்பினும் மண்ணெண்ணையைப் பொறுத்தவரை தொடர்ந்து நஷ்டக்கணக்குதான் காட்டப்படுகிறது. ரேஷன் மண்ணெண்ணை மூலம் லிட்டருக்கு ரூ. 17.26 நஷ்டம் ஏற்படுவதாக எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications