அசோக் சவான் மகாராஷ்டிரா முதல்வர் - புஜ்பல் து. முதல்வர்

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பதவி விலகி விட்டார். இதையடுத்து அடுத்த முதல்வரைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மும்முரமாக ஈடுபட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நெருக்குதலும் இருந்ததால் அவர்களுக்கும் ஒத்துவரக் கூடிய முதல்வரைத் தேர்வு செய்ய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது காங்கிரஸ்.
மகாராஷ்டிர தொழில்துறை அமைச்சர் அசோக் சவானை முதல்வராக்க காங்கிரஸ் நினைக்க அதற்கு தேசியவாத காங்கிரசின் ஆதரவு கிடைக்கவில்லை. அவர்கள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் என நெருக்குதல் தந்து வந்தனர்.
முதலில் இதற்குப் பணிந்த காங்கிரஸ் பின்னர் ஷிண்டேவை முதல்வராக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு விட்டு நாராயண் ரானேவை முதல்வராக்குவோம் என்றது. சிவசேனையிலிருந்து காங்கிரசுக்கு வந்த ரானேவை சமாளிப்பது கஷ்டம் என்பதால் அவரையும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பவார் ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து அசோக் சவானையே ஏற்கத் தயார் என்று பவார் தரப்பு இறங்கி வந்தது.
இந் நிலையில் இன்று காலை அந்தோணி மற்றும் பிரணாப்புடன் சோனியா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தை முடித்து விட்டு வந்த பிரணாப் முகர்ஜி, காத்திருந்த செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் வேகமாக கிளம்பிப் போய் விட்டார்.
இதற்கிடையே மேலிட அழைப்பின் பேரில் அசோக் சவானும், நாராயண் ராணேவும் டெல்லி விரைந்தனர்.
இதையடுத்து அசோக் சவானை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்தது. இதை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மறைந்த முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும் மத்திய அமைச்சருமான எஸ்.பி. சவானின் மகன் தான் அசோக் சவான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் துணை முதல்வராக ஜகன் புஜ்பல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காவல்துறையை உள்ளடக்கிய உள்துறையை அவர் கவனிப்பார்.












Click it and Unblock the Notifications