தீவிரவாதிகளால் கோவாவுக்கு மிரட்டல் - அரசு
பனாஜி: கோவா மாநிலத்தை அல் கொய்தா உள்ளிட் அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக கோவா மாநில தலைமைச் செயலாளர் ஜே.பி.சிங், மாநில அமைச்சர்களுக்கு சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஜே.பி.சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தீவிரவாதிகளின் மிரட்டல் கோவாவுக்கு அதிகரித்துள்ளது. அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகள் கோவாவைக் குறி வைக்கும் அபாயம் உள்ளது. சில குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களை அவர்கள் தாக்கக் கூடும்.
கோவாவின் 105 கிலோமீட்டர் நீள கடற்கரை, முக்கிய துறைமுகங்கள், கடற்கரைகளை தீவிரவாதிகள் குறி வைக்கலாம்.
கோவாவில் நடந்து வரும் சர்வதேச இந்தியப் பட விழா நிகழ்ச்சி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சுற்றுலா வரைபடத்தில் கோவா முக்கிய இடத்தில் உள்ளது. இவை அனைத்தும் தீவிரவாத தாக்குதல் வரைபடத்தில் கோவாவை முக்கிய இடத்திற்கு இடம் பெயரச் செய்யும் அபாயம் அதிகரித்துள்ளது.
எனவே நிலைமையை சமாளிக்க காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சிங்.
இதுவரை தீவிரவாதத் தாக்குதல் அபாயம் இல்லை என்று கோவா அரசு கூறி வந்தது. ஆனால் தற்போதுதான் முதல் முறையாக கோவாவுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ம் ஆண்டு தெற்கு கோவாவின் மர்கோவா ரயில் நிலையத்தில் வைத்து வெடிபொருட்களுடன் காஷ்மீரைச் சேர்ந்த தாரிக் பட்லூ என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், டெஹ்ரிக் உல் முஜாஹித் என்ற தீவிரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால், இந்த ஆண்டு கோவா கோர்ட் தாரிக்கை விடுதலை செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.