மும்பை: பாக்.குக்கு வலுவான ஆதாரம் வேண்டுமாம்!
மும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானியர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து நெருக்கி வருகின்றன. மேலும் இதுதொடர்பாக அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 48 மணி நேர கெடுவையும் விதித்துள்ளது.
இதனால் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற பிடிவாத நிலையிலிருந்து பாகிஸ்தான் சற்று இறங்கி வந்துள்ளது. இருப்பினும் தங்கள் மீது குற்றம் சாட்டும் இந்தியா, அதை நிரூபிக்கத் தேவையான வலுவான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என புது கோரிக்கையை வைத்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையில் நடந்த இரு வேறு கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டங்களில் மூத்த அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில்,மும்பை தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
முதல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இக்கூட்டத்தில், இந்திய மீடியாக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக செய்து வரும் பிரசாரத்தை எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஆதாரமில்லாமல் புகார்களைக் கூற வேண்டாம். வலுவான ஆதாரங்களைத் தருமாறு இந்தியாவைக் கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டதாம்.
இந்த இரு ஆலோசனைக் கூட்டங்கள் குறித்தும் பாகிஸ்தான் அரசு சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஒரு அறிக்கையை மட்டும் அரசு வெளியிட்டுள்ளது.
இந்திய - பாக். அதிகாரிகள் சந்திப்பு
இதற்கிடையே, இந்திய, பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் சந்தித்து, எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்து செல்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி பி.கே.சிங் தலைமையிலான 12 பேர் கொண்ட இந்தியக் குழு இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.
எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்து செல்வது, எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இது வழக்கமான கூட்டம்தான் என்று இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.