5 மாவட்ட விவசாயிகள் 11ம் தேதி சாலை மறியல்
திருவாரூர்: தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து தரக்கோரி டிசம்பர் 11- ம் தேதி சாலை மறியல் நடத்தப்படும் என்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் துரைமாணிக்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நவம்பர் மாதம் பெய்த கன மழை மற்றும் புயல் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளது.
மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன வடிகால்கள் அனைத்திலும் பெரும் உடைப்புகள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால், லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களின் குடியிருந்த இடங்களை விட்டு வெளியேறி சாலைகளிலும், பொது இடங்களில் அகதிகள் போல தஞ்சமடைந்துள்ளனர்.
மாற்றுத்துணி கூட இன்றி, உணவு, உடமைகளை இழந்து, வாழ வழியின்றி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாய் உள்னர்.
இவர்கள், தங்களின் நிலங்களில் சாகுபடி செய்திருந்த சம்பா, தாளடி பயிர்கள் அனைத்தும் அழிந்துவி்ட்டதால் , விவசாயிகள் தங்களின் இருண்ட எதிர் காலத்தை எண்ணி தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகி உள்ளன.
அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்தது போல் உள்ளது.
வெள்ளச்சேதம் குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற அரசு உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். நிவாரணத் தொகையை அதிகரித்து தர வேண்டும்.
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்த்திட டிசம்பர் 11-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.