பாக். விரைவாக செயல்படாவிட்டால் இந்தியா தாக்கும்: மெக்கெய்ன் எச்சரிக்கை
பாகிஸ்தான் பயணத்தை மேற்கொண்டுள்ள மெக்கெய்ன், நேற்று லாகூரில் மூத்த பத்திரிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளுக்கு இந்த சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன.
மேலும், பல்வேறு தீவிரவாத முகாம்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதற்கான ஆதாரங்களும் உள்ளன.
எனவே மும்பை தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால், தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வான் ரீதியான தாக்குதலுக்கு இந்தியா ஆயத்தமாக உள்ளது.
தற்போது எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களில் இருப்பவர்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு பாகிஸ்தானுக்குள் இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் போர் அதிகரித்த பின்னர், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் பெருகி விட்டன என்றார் மெக்கெய்ன்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது குறித்து மெக்கெய்ன் கூறுகையில், எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறை மிகவும் கோபத்துடன் காணப்பட்டதாக தெரிவித்தார்.