ஜெ. ஆட்சியின் ஆட்டத்தை இடதுசாரிகள் மறந்து விட்டனர்: கருணாநிதி

இதுகுறித்து முரசொலியில் தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது ..
சட்டசபைத் தேர்தலில் கணிப்புகளைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ். சமீபத்திய மும்பை தாக்குதல் சம்பவத்தாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு இருக்கும் என்று கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்றனர். ஆனால் ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வென்றுள்ளது.
இதன் மூலம் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளில் மக்கள் இன்னும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது வெளிப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவு மதவாத சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
டெல்லியில் பெரும்பான்மை பலத்துடனும், ராஜஸ்தானில் பாஜகவிடமிருந்து ஆட்சியைப் பறித்தும், மிஸோரமில் சாதனை வெற்றியையும் பதிவு செய்துள்ளது காங்கிரஸ்.
இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், திறமையான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளுக்கு மக்கள் கொடுத்துள்ள பரிசாகும்.
ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த அலையை டெல்லியில் வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர். 3வது முறையாக அங்கு காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.
மக்களின் நலன்களை பார்த்துக் கொள்ளும் அரசை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதே இந்தத் தேர்தலின் முடிவுகள் விளக்குகின்ரன
மும்பைத் தீவிரவாத தாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் மக்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மக்கள் பொய் என்று நிரூபித்து விட்டனர். இதுபோன்ற நிலைக்கு ஆளுங்கட்சி மட்டுமே காரணம் இல்லை என்பதை மக்கள் தெளிவாக்கியுள்ளனர்.
அதிமுகவின் ஆட்டத்தை மறந்த இடதுசாரிகள்
திமுகத்தில் திமுக நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அதிமுகவுடன் கூட்டணி சேர போட்டி போட்டு போய்க் கொண்டுள்ளன.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது அது எப்படியெல்லாம் ஆட்டம் போட்டது என்பதை இந்த கட்சிகள் அனைத்தும் உணர்ந்திருந்தும் கூட, அதிமுகவுடன் கூட்டணி சேர முனைகின்றன. இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications