வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் குட்டு!!
மேலும் அரசு அறிவித்துள்ள பொருளாதாரச் சலுகைகள் முழுமையாக அடிமட்ட மக்களைச் சென்றடைய வங்கிகள் உதவ வேண்டும். அனைத்து சலுகைகளையும் வங்கியுடனேயே நிறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:
இந்த நிதி ஆண்டு கடுமையாக அமைந்துவிட்டது. ஆனால் வரும் நிதியாண்டு 2009-10 இதை விட கடும் சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
இப்போதை விட கடும் சரிவை சந்திக்கவிருக்கிறது நாட்டின் பொருளாதார வளர்ச்சி. இதுகுறித்து சர்வதேச நிதி அமைப்பான ஐஎம்எப் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்திய அரசுக்கு விரிவான அறிக்கையும் அனுப்பியுள்ளது. இப்போது முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கினாலும், வரும் இழப்புகளைத் தடுக்கவே முடியாது. அந்த அளவு பாதிப்புகள் நமக்கும் வரவுள்ளன.
ஆனாலும் அரசுகள் மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளின் குறுக்கே நிற்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை.
மேலும் வட்டி விகிதங்கள் குறையுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். அதை எப்போது எப்படி குறைப்போம் என்பது உண்மையில் எங்களுக்கே தெரியாது!
இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவிகிதமாக இருக்கும் என கணித்தோம். ஆனால் எதிர்பார்த்ததை விட இன்னும் குறைவான வளர்ச்சிதான் கிட்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு இந்த அளவு கூட இருக்காது. 5 சதவிகிதம்தான் இருக்கும் எனத் தெரிகிறது.
பொருளாதார நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்க, அரசு அறிவித்துள்ள பல ஆயிரம் கோடி சிறப்புச் சலுகைகள் அடிமட்ட மக்களுக்கும் போய் சேரும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் அறிவிப்புக்கு அர்த்தமிருக்காது. அவரவர் தங்கள் பாதுகாப்பை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி எப்படி அதிகரிக்கும்?
இன்றைய தேவை ஒருங்கிணைந்த வளர்ச்சி. அதற்கு வங்கிகள், தனியார் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருமே ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது. பார்க்கலாம்... அடுத்த நிதியாண்டு என்ன நடக்கிறது என்பதை!, என்றார் சுப்பாராவ்.