சிக்கலுக்கு மத்தியிலும் ஊதிய உயர்வை அறிவித்த டாடா ஸ்டீல்
ஜாம்ஷெட்பூர்: உலக அளவில் நிலவும் நிதிச் சிக்கலையும் பொருட்படுத்தாமல், தனது நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உப அமைப்பான தொழிற்சாலை உபகரண வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டாடா ஸ்டீல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தில், டாடா ஸ்டீல் தலைமை ஆபரேஷன் அதிகாரி நெருர்கலும், டாடா தொழிலாளர் யூனியன் தலைவர் ராகேஷ்வர் பான்டேவும் கையெழுத்திட்டுள்ளனர்.
புதிய ஊதிய விகிதத்தின்படி, ஆர்.ஜி. 1 கிரேடில் வரும் ஊழியர்களுக்கான தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ. 4000 என்பதிலிருந்து ரூ. 8080 ஆக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச அடிப்படைச் சம்பளம் தற்போது ரூ. 10 ஆயிரத்து 750 ஆக உள்ளது. அது ரூ. 18 ஆயிரத்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வின் மூலம் நிறுவனத்தில் பணியாற்றும் 700 ஊழியர்கள் பலன் அடைவார்கள்.
இந்த ஊதிய உயர்வு 2007ம் தேதி ஜனவரி 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் தவிர ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் குழும நிறுவனங்களில் பணியாற்றும் 16 ஆயிரத்து 500 ஊழியர்களுக்கு ஏற்கனவே ஊதிய விகிதம் திருத்தப்பட்டு விட்டது என்பது நினைவிருக்கலாம்.
உலகப் பொருளாதார நெருக்கடியை திறம்பட சமாளிப்பதோடு, உற்பத்தியையும் குறைக்காமல், ஊழியர்களுக்கு ஊதிய உயர்வையும் வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது டாடா என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா ஸ்டீல் நிறுவனம் நவம்பர் மாத உற்பத்தி கடந்த ஆண்டை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில், டாடா ஸ்டீல் நிறுவனம் ரூ. 1400 கோடி அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications