நிதியமைச்சர் நியமனம்-பிரதமர் திடீர் ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பொறுப்புக்கு புதியவரை நியமிக்கும் முடிவை திடீரென பிரதமர் ஒத்திவைத்து விட்டது. தற்சமயத்திற்கு பிரதமர் வசமே இப்பொறுப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
நிதியமைச்சராக இருந்து வந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து வந்த சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து அப்பொறுப்புக்கு மாற்றப்பட்டார். நிதியமைச்சர் பொறுப்பை தற்காலிகமாக தற்போது பிரதமரே வைத்துள்ளார்.
ஏற்கனவே அவரிடம் ஓய்வூதியர் நலன், பென்ஷன், திட்டம், அணுசக்தி மேம்பாடு, விண் வெளி ஆய்வு, நிலக்கரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல்-செய்தி ஒளிபரப்பு என 6 இலாகாக்கள் உள்ளன.
இந்த நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டார். அப்போது நிதித்துறைக்கு புதிய அமைச்சரை நியமிப்பது குறித்தும் அவர் ஆலோசித்து வந்தார்.
5 பெயர்கள் பரிசீலனை:
நிதியமைச்சர் பொறுப்புக்கு தற்போது ஐந்து பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநராகவும் இருந்த ரங்கராஜன், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்,
மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், மேற்கு வங்க மாநில எம்.பி சென்குப்தா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இருப்பினும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கே வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீரென நிதியமைச்சர் நியமனத்தை பிரதமர் ஒத்திவைத்து விட்டதாக தெரிகிறது.
நிதித்துறை தொடர்பான நாடாளுமன்றப் பணிகளில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உதவியாக இருப்பார் என லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் ஆகியோரிடம் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து நிதியமைச்சர் பொறுப்புக்கு புதியவரை நியமிக்கும் முடிவை அரசு தள்ளிப் போட்டுள்ளது தெளிவாகியுள்ளது.
மன்மோகனுடன் ரங்கராஜன், கிருஷ்ணா சந்தி்ப்பு:
இந்த நிலையில் ரங்கராஜனும், எஸ்.எம்.கிருஷ்ணாவும் இன்று பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
சந்திப்புக்குப் பின்னர் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், விசேஷம் ஏதும் இல்லை என்றார். ரங்கராஜன் கூறுகையில், நான் பிரதமரை அடிக்கடி சந்திப்பது வழக்கம். அதுபோலத்தான் இதுவும் என்றார்.












Click it and Unblock the Notifications