கோட்டை விட்ட கடலோரக் காவல்படை-சிதம்பரம்
டெல்லி: மும்பையில் கடல் வழியே தீவிரவாதிகள் நுழையலாம் என்ற தகவலை உளவுப் பிரிவினர் கடலோரக் காவல் படைக்கு தெரிவித்திருந்தனர் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று அவர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது:
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற தகவலை உளவுப் பிரிவினர் கடலோரக் காவல் படையிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், தவற விட்டுவி்ட்டார்கள்.
இதைப் போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படும்.
புதிய கடலோரக் காவல் கமாண்ட் அமைப்பு உருவாக்கப்படும்.
உளவுப் பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும். தீவிரவாதிகளை ஒடுக்க 20 சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
நமது நாட்டின் தீவிரவாதத் தடுப்புச் சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் என்.எஸ்.ஜி. படையினர் விரைந்து வருவதில் சில சிரமங்கள் ஏற்பட்டு விட்டது. காரணம், அவர்களுக்கென தனி விமானமோ , விமான நிலையமோ இல்லாததே காரணம்.
இருப்பினும் என்.எஸ்.ஜி. படையினர் வரும் வரை காத்திருக்காமல் மகாராஷ்டிர போலீஸார் தீரத்துடன், செயல்பட்டதை நாம் மறந்து விட முடியாது. அவர்களது பணி அசாதாரணமானது.
உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி ஏற்பட்டு விட்டது உண்மைதான். அதை சரி செய்து, இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மும்பை தாக்குதல் குறித்து இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் நம் அண்டை நாட்டின் (பாகிஸ்தான்) மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. தெற்காசிய பிராந்தியம் முழுவதுமே தீவிரவாதப் பிடியில் சிக்கியுள்ளது என்றார்.
இதையடுத்து இந்த அறிக்கை மீது விவாதம் தொடங்கியது. எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோர் அதன் மீது பேசினர்.