தீவிரவாதிகளின் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட்-கராச்சியில் செலுத்தப்பட்ட கட்டணம்
மும்பை: மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள், பயன்படுத்திய வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டாகால் (VoIP) சேவைக்கான கட்டணத்தை, கராச்சியில் உள்ள வெஸ்டர்ன் யூனியன் மூலம் செலுத்தப்பட்டிருப்பதை இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மும்பையில் நடந்துள்ள தீவிரவாதத் தாக்குதல், தீவிரவாதிகள் எந்த அளவுக்கு நவீனப்பட்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு நாளும் வெளியாகும் புதுப் புதுத் தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் வாய்ப் எனப்படும் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டாகால் என்ற நவீன சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சேவையைப் பயன்படுத்தி கராச்சியில் உள்ள தங்களது தலைவர்களிடம் அவர் பேசியுள்ளனர், தாக்குதலை திட்டமிட்டுள்ளனர். ஆலோசனைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சேவைக்கான கட்டணம் கராச்சியில் செலுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்தின் மூலம் இதற்காக 290 டாலர் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் வைத்திருந்த 6 செல்போன்களில், 2 போன்களில் இந்த வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் பேசியுள்ளனர்.
இதற்குத் தேவையான சிம் கார்டுகள், தொலைபேசி இணைப்புகள், இன்டர்நெட் இணைப்பு, சாட்டிலைட் போன் உள்ளிட்டவற்றை லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த, தொலைத்தொடர்புப் பிரிவுத் துறை தலைவனான ஜரார் ஷா என்பவன் செய்து கொடுத்ததாக தெரிகிறது.
எப்படி கண்டுபிடித்தது இந்தியா?:
இந்த முக்கிய தகவலை, அமெரிக்காவின் எப்.பி.ஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு ஆகிய அமைப்புகளின் உதவியுடன் இந்திய உளவு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
போலியான அடையாள சான்றை வைத்து இந்த வாய்ப் சேவையை தீவிரவாதிகள் பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தீவிரவாதிகள் தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதையும் அமெரிக்க, இங்கிலாந்து புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.
வாய்ப் சேவைக்கான எண்ணை புளோரிடா மாநிலம், ஓர்லாண்டோவிலிருந்து வாங்கியுள்ளனர். இதைத்தான் மும்பைக்குள் ஊடுறுவிய 10 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.
கராச்சியில் இருந்த லஷ்கர் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் இதைத்தான் பயன்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications