சட்ட உதவி கோரி பாக். தூதரகத்திற்கு கஸாப் கடிதம்

இந்தக் கடிதத்தை மும்பை போலீஸார், வெளியுறவுத்துறை மற்றும் உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இணை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மரியா கூறுகையில், தனது கடிதத்தில் நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்.
தனக்கு இந்திய வழக்கறிஞர்கள் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே எனக்கு வேண்டிய சட்ட உதவிகளை பாகிஸ்தான் அரசு செய்ய வேண்டும். தூதரகத்திலிருந்து ஒரு பிரதிநிதியை இதுதொடர்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் நடந்த மோதலின்போது கொல்லப்பட்ட தீவிரவாதி இஸ்மாயில் கான் உடலை பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கஸாப் கோரியுள்ளான் என்றார் மரியா.
கஸாப் டிசம்பர் 24ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
கஸாப் மீது நாட்டின் மீது போர் தொடுத்தல், கொலை, கொலைச் சதி, குற்றச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் தான் என்பது ஏற்கனவே நிரூபணமாகி விட்டது. அவனது தாய், தந்தையர் மற்றும் உறவினர்கள், அவன் சார்ந்த பரீத்கோட் கிராமத்தினர், கஸாப்பை அடையாளம் காட்டியுள்ளனர்.
ஆனால் கஸாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு இந்தியாவுக்கு தேவையில்லாமல் கோரிக்கை வைத்துள்ளது பாகிஸ்தான். இந்தியா ஆதாரத்தைக் காட்டினால்தான் கஸாப் பாகிஸ்தானி என்பதை ஒப்புக் கொள்வோம் எனவும் அது கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications