மும்பை தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாதான் காரணம்: பிரவுன்

இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் டெல்லி வந்துள்ளார். இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்து மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதித்தார்.
பிரவுன் - மன்மோகன் சிங் சந்திப்பின்போது வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது, மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை பிரவுனிடம் இந்தியா பகிர்ந்து கொண்டதாக கூற்பபடுகிறது. பாகிஸ்தானுக்கும், இந்த சம்பவத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவாக விவரித்ததாகவும் கருதப்படுகிறது.
மும்பை சம்பவம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் பிரவுன் டெல்லி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இங்கிலாந்து போலீஸ் குழு மும்பை வந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது நினைவிருக்கலாம்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவுன், மும்பையில் நடந்த மிகக் கொடுமையான தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் காரணம். இதற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக பதிலளித்தாக வேண்டும்.
நான் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்திக்கும்போது நிச்சயம் டெல்லியின் கவலைகளை அவரிடம் தெரிவிப்பேன்.
தீவிரவாதிகளுக்கு யாரும் அடைக்கலம் தர முயலக் கூடாது. இதுதொடர்பாக உலக சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு யாரும் நிதியுதவி செய்யக் கூடாது. அதைத் தடுக்கும் வகையில் உலக நாடுகள் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
இந்திய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானும் சிலரைக் கைது செய்துள்ளது. இந்த கொடும் செயலுக்குக் காரணம் லஷ்கர் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது பாகிஸ்தானின் கடமை என்றார் பிரவுன்.












Click it and Unblock the Notifications